மனநலன் குன்றியோர் நலன்களைக் காக்க அரசு நடவடிக்கை எடுக்குமா?


திருச்சி,​​ ஜூன் 29
மனநலன் குன்றியோரின் நலனுக்காக கூடுதலாக சிறப்புப் பள்ளிகள்,​​ காப்பகங்கள் தொடங்கப்பட வேண்டும்.​ மேலும்,​​ அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து,​​ வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.​ ​

​ ​ ​ உடல் ஊனமுற்றோர்,​​ மனநலன் குன்றியோர்,​​ கண் பார்வையற்றோர்,​​ காது கேளாதோர்,​​ வாய் பேச முடியாத குறைபாடு உடையோர் எனப் பல்வேறு வகையான உடல் ஊன குறைபாடுகளைக் கொண்டோர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தனர்.

​ ​ ​ ​ இவ்வாறு அழைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் இனி மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்கப்படுவர் என,​​ தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.

​ ​ ​ அந்த அறிவிப்போடு அவர் நின்றுவிடாமல்,​​ முன்பு உடல் ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை என்றழைக்கப்பட்டு வந்த துறையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து,​​ அத் துறையை தானே நிர்வகித்து வருகிறார்.

​ ​ ​ ​ தற்போது தமிழக மொத்த மக்கள் தொகையில் 2.5 சதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

​ ​ ​ ​ மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒன்றாகக் கருதப்படும் மனநலன் குன்றியோர் பல்வேறு நிலைகளில் உள்ளனர்.​ கல்வி கற்கக் கூடியவர்கள்,​​ பயிற்சி பெறக் கூடியவர்கள்,​​ பராமரிக்கப்பட வேண்டியவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அவர்கள் இருக்கின்றனர்.​ ​

​ ​ ​ ​ ​ ​ ​ சென்னை குரோம்பேட்டையில் மனநலன் குன்றியவர்களுக்காக சிறப்புப் ​ பள்ளி நடத்தப்பட்டு வருகிறது.​ இதுமட்டுமல்லாமல்,​​ மனநலன் குன்றியவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநிலம் முழுவதும் 10 மையங்களை அரசு நடத்தி வருகிறது.

​ ​ ​ ​ ​ இந்த மையங்களுக்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்குகிறது.​ இதுமட்டுமல்லாமல்,​​ மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கு மாதம் ரூ.​ 500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

​ ​ ​ ​ ​ ​ இந்நிலையில்,​​ மனநலன் குன்றிய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தற்போது அவர்களின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.​ அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.

​ ​ ​ ​ ​ மனநலன் குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளை மையங்களில் சேர்த்து விடுகிறோம்.​ குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் படித்து முடித்து விடுகிறார்கள்.​ அதன் பின்னர்,​​ அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

​ ​ ​ ​ அரசு சார்பில் சிறப்பு தொழில் மையங்களை உருவாக்கி,​​ மனநலன் குன்றியவர்களின் திறனுக்கேற்ப தொழில் பயிற்சியை அளித்து,​​ அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மனநலன் ​ குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.

​ ​ ​என்ன செய்ய வேண்டும் அரசு:​​ மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சார்பில் 48 விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.​ உயர் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ,​​ மாணவிகளுக்கான தனிக் கட்டணத்தைக் கூட ரத்து செய்து அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.​ ​

​ ​ ​ ​ இதுமட்டுமல்லாமல்,​​ மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.​ பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்த 72 பேரில் தகுதியுள்ள 60 பேருக்கு ஆசிரியர் பணி நியமனமும் அண்மையில் வழங்கப்பட்டன.​ இவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக அரசு பல்வேறுவிதமான சலுகைகளையும்,​​ நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.

​ ​ ​ ​ மனநலன் குன்றியவர்கள் கல்வி கற்க சிறப்புக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும்,​​ அந்த கல்வி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.​ ​ இந்தக் கல்விக்கான பாடத் திட்டத்தை அரசே வழங்க வேண்டும்.​ கல்வி வழங்கிய பிறகு அவர்கள் தங்குவதற்கு காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.

​ ​ ​ ​ ​ ​ ​ கல்வியைப் பெற்ற மனநலன் குன்றியவர்கள்,​​ தங்கள் வாழ்க்கையை தாங்களே நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில்,​​ அவர்களுக்கு தொழில் பயிற்சியை அளிக்கும் விதமாக சிறப்பு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிறார் திருச்சி இன்டேக்ட் சிறப்புப் பள்ளியின் இயக்குநர் தாமஸ் எபிநேசர்.

​ ​வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லை?:​​ மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது.​ இதில் கண் பார்வையற்றவர்கள்,​​ காது கேளாதவர்கள்,​​ உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.​ மனநலன் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை,​​ வாய்ப்பும் கிடைப்பதில்லை.

​ ​ ​ ​ வெளிநாடுகளில் உள்ளதுபோல,​​ உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ்,​​ மொத்தமுள்ள இடங்களில் 30 சதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் தாமஸ் எபிநேசர்.

​ ​ ​ ​ ​ ​ மாற்றுத் திறனாளிகள் மீது அதிகம் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர்,​​ மாநிலத்தில் அரசால் நடத்தப்படும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை மேலும் அதிகரிக்க வேண்டும்,​​ காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.

1 comments:

வெங்கட்ராமன் said...

மாற்றுத்திறனாளர்களைப்பற்றி மிக மோசமாக சித்தரித்து முருகன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)எழுதிய துக்ளக் வார இதழில் வெளிவந்த கட்டுரையை தாங்கள் படித்தீர்களா. அதனை படிக்கவில்லையென்றால் http://vrabled.blogspot.com/2010/06/blog-post_29.html இணைப்பில் படிக்கவும். மறக்காமல் உங்கள் கருத்தகளையும் பதிவு செய்யவும்.

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers