திருச்சி, ஜூன் 29
மனநலன் குன்றியோரின் நலனுக்காக கூடுதலாக சிறப்புப் பள்ளிகள், காப்பகங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து, வேலைவாய்ப்பை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
உடல் ஊனமுற்றோர், மனநலன் குன்றியோர், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், வாய் பேச முடியாத குறைபாடு உடையோர் எனப் பல்வேறு வகையான உடல் ஊன குறைபாடுகளைக் கொண்டோர் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தனர்.
இவ்வாறு அழைக்கப்பட்டு வருபவர்கள் அனைவரும் இனி மாற்றுத் திறனாளிகள் என்றே அழைக்கப்படுவர் என, தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி.
அந்த அறிவிப்போடு அவர் நின்றுவிடாமல், முன்பு உடல் ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத் துறை என்றழைக்கப்பட்டு வந்த துறையை மாற்றுத் திறனாளிகள் நலத் துறை எனப் பெயர் மாற்றம் செய்து, அத் துறையை தானே நிர்வகித்து வருகிறார்.
தற்போது தமிழக மொத்த மக்கள் தொகையில் 2.5 சதம் பேர் மாற்றுத் திறனாளிகளாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மாற்றுத் திறனாளிகள் பிரிவில் ஒன்றாகக் கருதப்படும் மனநலன் குன்றியோர் பல்வேறு நிலைகளில் உள்ளனர். கல்வி கற்கக் கூடியவர்கள், பயிற்சி பெறக் கூடியவர்கள், பராமரிக்கப்பட வேண்டியவர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அவர்கள் இருக்கின்றனர்.
சென்னை குரோம்பேட்டையில் மனநலன் குன்றியவர்களுக்காக சிறப்புப் பள்ளி நடத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், மனநலன் குன்றியவர்களுக்காக தனியார் தொண்டு நிறுவனங்களின் மூலம் மாநிலம் முழுவதும் 10 மையங்களை அரசு நடத்தி வருகிறது.
இந்த மையங்களுக்குத் தேவையான நிதியையும் அரசு ஒதுக்குகிறது. இதுமட்டுமல்லாமல், மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோருக்கு மாதம் ரூ. 500 உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மனநலன் குன்றிய குழந்தைகளின் எதிர்காலம் என்ன ஆகும் என்ற கவலை தற்போது அவர்களின் பெற்றோர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. அதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் அனைவரையும் யோசிக்க வைத்துள்ளது.
மனநலன் குன்றிய நிலையில் பிறக்கும் குழந்தைகளை மையங்களில் சேர்த்து விடுகிறோம். குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் படித்து முடித்து விடுகிறார்கள். அதன் பின்னர், அவர்களது நிலை என்ன என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
அரசு சார்பில் சிறப்பு தொழில் மையங்களை உருவாக்கி, மனநலன் குன்றியவர்களின் திறனுக்கேற்ப தொழில் பயிற்சியை அளித்து, அவர்களின் வாழ்க்கை மேம்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.
என்ன செய்ய வேண்டும் அரசு: மாற்றுத் திறனாளிகளுக்கு அரசின் சார்பில் 48 விதமான சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயர் கல்வி பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ, மாணவிகளுக்கான தனிக் கட்டணத்தைக் கூட ரத்து செய்து அண்மையில் முதல்வர் அறிவிப்பு வெளியிட்டார்.
இதுமட்டுமல்லாமல், மாற்றுத் திறனாளிகள் 100 பேருக்கு பேட்டரியில் இயங்கும் மூன்று சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன. பூந்தமல்லி அரசு பார்வையற்றோர் ஆசிரியர் பயிற்சி மையத்தில் படித்த 72 பேரில் தகுதியுள்ள 60 பேருக்கு ஆசிரியர் பணி நியமனமும் அண்மையில் வழங்கப்பட்டன. இவ்வாறு மாற்றுத் திறனாளிகளுக்கு திமுக அரசு பல்வேறுவிதமான சலுகைகளையும், நலத் திட்டங்களையும் வழங்கி வருகிறது.
மனநலன் குன்றியவர்கள் கல்வி கற்க சிறப்புக் கல்வித் திட்டம் உருவாக்கப்பட வேண்டும், அந்த கல்வி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தக் கல்விக்கான பாடத் திட்டத்தை அரசே வழங்க வேண்டும். கல்வி வழங்கிய பிறகு அவர்கள் தங்குவதற்கு காப்பகம் அமைக்கப்பட வேண்டும்.
கல்வியைப் பெற்ற மனநலன் குன்றியவர்கள், தங்கள் வாழ்க்கையை தாங்களே நடத்த முடியும் என்ற நிலையை உருவாக்கும் வகையில், அவர்களுக்கு தொழில் பயிற்சியை அளிக்கும் விதமாக சிறப்பு மையங்களை உருவாக்க வேண்டும் என்கிறார் திருச்சி இன்டேக்ட் சிறப்புப் பள்ளியின் இயக்குநர் தாமஸ் எபிநேசர்.
வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு இல்லை?: மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சத இடஒதுக்கீடு வேலைவாய்ப்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கண் பார்வையற்றவர்கள், காது கேளாதவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகியோருக்கு தலா ஒரு சதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. மனநலன் குன்றியவர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடும் கிடைப்பதில்லை, வாய்ப்பும் கிடைப்பதில்லை.
வெளிநாடுகளில் உள்ளதுபோல, உறுதிப்படுத்தப்பட்ட வேலைவாய்ப்பு என்ற பிரிவின் கீழ், மொத்தமுள்ள இடங்களில் 30 சதத்தை மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் என்கிறார் தாமஸ் எபிநேசர்.
மாற்றுத் திறனாளிகள் மீது அதிகம் அக்கறை கொண்டுள்ள தமிழக முதல்வர், மாநிலத்தில் அரசால் நடத்தப்படும் மனநலன் குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகளை மேலும் அதிகரிக்க வேண்டும், காப்பகங்களை உருவாக்க வேண்டும் என்று விரும்புகின்றனர் மனநலன் குன்றிய குழந்தைகளின் பெற்றோர்கள்.
1 comments:
மாற்றுத்திறனாளர்களைப்பற்றி மிக மோசமாக சித்தரித்து முருகன் ஐ.ஏ.எஸ் (ஓய்வு)எழுதிய துக்ளக் வார இதழில் வெளிவந்த கட்டுரையை தாங்கள் படித்தீர்களா. அதனை படிக்கவில்லையென்றால் http://vrabled.blogspot.com/2010/06/blog-post_29.html இணைப்பில் படிக்கவும். மறக்காமல் உங்கள் கருத்தகளையும் பதிவு செய்யவும்.
Post a Comment