நாமக்கல், ஜூலை 10: தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு முன்னோடியாக நாமக்கல்லில் ஊன்றுகோல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் முதல்கட்டமாக 100 மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் வசந்தம் பிறந்துள்ளது.
÷மாற்றுத் திறனாளிகளாக உள்ள நபரை ஆரோக்கியமான நிலையில் உள்ள நபர் ஒருவர் நண்பராக ஏற்று, மாற்றித் திறனாளிக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதே இந்த திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். பொருளுதவி மட்டுமின்றி, கல்வி கற்பதில் உதவி, வேலைவாய்ப்புக்கான வழிகாட்டுதல், அரசின் சலுகைகள் மற்றும் இதர பயன்பாடுகளை பெற்றுத் தருவதில் உதவி, தினமும் தொலைபேசியில் உரையாடல், வாரம் ஒரு முறை நேரில் சந்திப்பு, மாதம் ஒருமுறை அனுபவப் பகிர்வு என மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு வகையிலும் உதவிகளைப் பெற்றுத் தருகிறது இத் திட்டம்.
÷இதன் முதல்கட்டமாக 100 மாற்றுத் திறனாளிகளுக்கு ஆட்சியர் முதல் தொழிலாளி வரையில் 100 நபர்கள் உதவ முன்வந்துள்ளனர். குழந்தை நிலையில் உள்ள மாற்றுத் திறனாளி முதல் முதியோர் வரையிலான மாற்றுத் திறனாளிகள் பயன்பெறுகின்றனர். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் சகாயம், வெண்ணந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து 10-ம் வகுப்பில் 493 மதிப்பெண் பெற்ற கதிர்வேல் என்ற மாணவரை நண்பராக ஏற்றுள்ளார். இந்த மாணவர் தற்போது 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இதேபோல், மாவட்ட வருவாய் அலுவலர் கி. சாந்தி மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள், தன்னார்வ அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், விவசாயிகள், தொழிலாளர்கள் என 100 பேர் முன்வந்து 100 மாற்றுத் திறனாளிகளை தனது நண்பர்களாக ஏற்றுள்ளனர். ÷இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் சந்திக்கும் வகையிலான நிகழ்வு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. நண்பராக ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக ஒவ்வொருவரும் மாற்றுத்திறனாளிகளின் கையில் ராக்கி கயிறு கட்டினர். மேலும், ஊன்றுகோல் திட்டத்தில் நண்பராக ஏற்றுள்ள மாற்றுத் திறனாளியின் இன்பத்திலும், துன்பத்திலும் நல்ல தோழனாக இருந்து, அவர் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையவும், சாதனை படைக்கவும் உறுதுணையாக இருப்பேன் என 100 பேரும் உறுதிமொழி ஏற்றனர்.
÷ நாமக்கல் மாவட்ட சுகாதாரப் பணிகள் முன்னாள் இணை இயக்குநர் ஆர்.பி. இளங்கோ, பயிற்சி துணை ஆட்சியர்கள் கவிதா, செங்கோட்டையன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment