
சென்னை, ஜூலை 3: மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியை ரூ.20 ஆயிரத்தில் இருந்து, ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து, தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
2006-07-ம் நிதியாண்டு முதல் மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி திட்டங்களில் வழங்கப்படும் நிதியுதவியை ரூ. 15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.
இதர திட்டங்களுடன் 2009-2010-ம் ஆண்டு மாற்றுத் திறனாளியைத் திருமணம் செய்யும் மாற்றுத் திறனாளிகளுக்கும் திருமண உதவித் தொகை வழங்கும் திட்டம் நீட்டித்து ஆணை வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு முதல் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி வழங்கும் திட்டத்தில் ரூ. 20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதால், மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையையும் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என மே 15 ம் தேதி மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தின் போது முதல்வர் அறிவித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவித் தொகையை ரூ.25 ஆயிரமாக உயர்த்தி முதல்வர் ஆணையிட்டுள்ளார். இதில் ரூ.12,500 திருமண செலவிற்கு ரொக்கமாகவும், ரூ.12,500 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவியைப் பொருத்தவரை தம்பதியரில் ஒருவர் மாற்றுத் திறனாளியான இருத்தல் வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்பு மற்றும் கல்வித் தகுதி ஏதும் இல்லை.
சட்டப்பூர்வ திருமண வயதுடையவர்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையுடன் விண்ணப்பித்தால் திருமண நிதி உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment