
சென்னை, ஜூலை 2-
சென்னை உள்பட 14 அரசு மருத்துவ கல்லூரிகளின் 1398 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான முதல் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி அரங்கில் ஜுன் 28 தொடங்கியது. மாற்றுத் திறனாளிகள் பிரிவில் 34 மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரி சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.
விளையாட்டு பிரிவில் 3 பேருக்கும், முன்னாள் ராணுவ வீரர் குழந்தைகள் பிரிவில் 2 பேருக்கும் அனுமதி கடிதம் வழங்கப்பட்டன.
ரேங்க் பட்டியலில் 200க்கு 200 பெற்று சிறப்பிடம் பெற்ற 12 பேருக்கு சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சென்னை மருத்துவ கல் லூரியில் சேருவதற்கான சேர்க்கை கடிதத்தை வழங்கினார். அனைத்து பிரிவைச் சேர்ந்த 78 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு கல்லூரியில் சேருவதற்கான சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டது.
ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற மாணவி அபிநயா, மற்றொரு மாணவி ஆகிய 2 பேர் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. இதனால் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு இந்த ஆண்டும் கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது.
கலந்தாய்வு தொடங்கிய சிறிது நேரத்தில் சென்னை மருத்துவ கல்லுரியில் உள்ள அனைத்து பிரிவினருக்கான 44 இடங்களும் நிரம்பின. ரேங்க் பட்டியலில் இடம் பெற்ற 12 மாணவ- மாணவிகளும் சென்னை மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. அனைத்து பிரிவினருக்கு கலந்தாய்வு நடக்கிறது.
ரேங்க் பட்டியலில் 80-வது ரேங்க் (கட்-ஆப் மதிப்பெண் 199.25) முதல் 499-வது ரேங்க் (கட்-ஆப் மதிப்பெண் 197.75) வரை உள்ள 420-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கிறார்கள். ஜூலை 2-ந்தேதி வரை கவுன்சிலிங் நடைபெறுகிறது.
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் 4 தனியார் கல்லூரிகள் புதிதாக தொடங்க அனுமதிக்காக காத்திருக்கின்றன. வண்டலூர் தாகூர் மருத்துவ கல்லூரி, திருவேற்காடு ஸ்ரீமுத்துக்குமரன் மருத்துவ கல்லூரி ஆகியவை தலா 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க இந்திய மருத்துவ கவுன்சிலின் அனுமதியை ஏற்கனவே கோரியுள்ளன. இந்த கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 65 சதவீத இடங்கள் கிடைக்கும்.
இவை தவிர சேலத்தில் ஸ்ரீ அன்னபூரணி மருத்துவ கல்லூரி, சென்னை அருகே திருவள்ளூரில் டி.டி.நாயுடு மருத்துவ கல்லூரி ஆகியவை புதிதாக இந்த ஆண்டு தொடங்கப்படுகின்றன.
மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு செய்து சென்றனர். ஸ்ரீவிநாயகா மிஷன் அறக்கட்டளை சார்பில் தொடங்கப்படும் ஸ்ரீஅன்னபூரணி மருத்துவ கல்லூரியில் 150 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி கோரியுள்ளது. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட இந்த கல்லூரி அனுமதி கோரியுள்ளதால் ஒப்புதல் கிடைக்கும் நிலையில் உள்ளது. இதன் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 97 இடங்கள் கிடைக்கும்
0 comments:
Post a Comment