பார்வையற்றவர்களில் மூன்றில் ஒரு பங்கு இந்தியர்கள்: ஜப்பானிய துணை தூதர் தகவல்


சென்னை : ""உலகில் உள்ள பார்வையற்றவர்களில் மூன்று ஒரு பங்கினர் இந்தியர்கள்,'' என ஜப்பானிய துணைத் தூதர் தெரிவித்தார்.கண்ணின் விழி வெண்படலம் எனப்படும் கார்னியாவில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளால், பார்வையிழப்பு ஏற்படுகிறது.இதன் மூலம் ஏற்படும் பார்வையிழப்பை தடுக்க, நோயாளியிடமிருந்தே மூலச் செல்களை உருவாக்கி அதை சிகிச்சைக்கு பயன்படுத்தும் புதிய முறையை, சென்னை
சங்கர நேத்ராலயாவின் பார்வை ஆராய்ச்சி நிறுவனம் கண்டறிந்து சாதனை படைத்துள்ளது. 

இதற்கு தற்போது காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.இந்த ஆராய்ச்சி, சங்கர நேத்ராலயா மைக்ரோ பயாலஜி துறையின் இயக்குனர் மாதவன் தலைமையிலான குழு, டாக்டர் சாமுவேல் ஆப்ரகாம் தலைமையிலான இந்தோ - ஜப்பானிய கூட்டமைப்பு மற்றும் ஜப்பான் வாசோ பல்கலை பாலிமர் சயின்ஸ் பேராசிரியர் யூயிச்சி மோரி, டாக்டர் ஹிரோஷி யோசியோகா குழுவினர் இணைந்து நிகழ்த்தியுள்ளனர்.உலகிலேயே முதன் முறையாக, சிந்தெடிக் பொருளை பயன்படுத்தி, கார்னியாவின் ஆதார மூலச் செல்லை தனியே வளர்த்து, அதை பாதிக்கப்பட்டவரின், கார்னியா செல்லுக்கு மாற்றாக பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம், வைரஸ் மற்றும் இதர அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தும் நோய்த் தொற்றுகளை தடுக்க முடிகிறது. புதிய கண்டுபிடிப்பின் மூலம் கார்னியாவில் உருவாகும் பாதிப்புகளால் ஏற்படும் பார்வையிழப்புகளை வெகுவாகக் குறைக்க முடியும். இந்த கண்டுபிடிப்பிற்கு ஜப்பான் - இந்தியா கூட்டு காப்புரிமை பதிவு செய்யப்பட்டுள்ளது.புதிய கண்டுபிடிப்பு குறித்து விளக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், இந்தியாவிற்கான ஜப்பான் துணைத் தூதர் டக்காய்குய் கிட்டகோவா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவர் பேசியதாவது:இத்தகைய கூட்டு முயற்சி பாராட்டத்தக்கது. இது போன்ற ஆராய்ச்சிகளும், முயற்சிகளும் எதிர்காலத்திலும் தொடர வேண்டும். உலகில் நான்கரை கோடி பார்வையற்றவர்கள் உள்ளனர். இதில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியர்கள்; இதில், பெரும்பான்மையானவர்கள் 45 வயதிற்கு குறைவானவர்கள்.அவர்களுக்கு இத்தகைய ஆராய்ச்சிகள் உதவிகரமாக அமையும். சென்னை நகரம் வேகமாக வளர்ந்து வருகிறது.இங்கு பல்வேறு தொழில்களும் பெருகி வருகின்றன. இங்கு மருத்துவம் சார்ந்த தொழில்களும் அதிகம் வளர்ந்து, சென்னை இந்தியாவின் பிலடெல்பியா நகராக உருவாக வேண்டும்.இவ்வாறு ஜப்பான் துணைத் தூதர் பேசினார்.விழாவில், சங்கர நேத்ராலயா தலைவர் வைத்தியநாதன், முன்னாள் தலைவர் பத்ரிநாத், மைக்ரோ பயாலஜி துறை இயக்குனர் மாதவன், என்.சி.ஆர்.எம்., இயக்குனர் சாமுவேல் ஆப்ரகாம், டாக்டர் மீனாட்சி, டாக்டர் பாஸ்கர் சீனிவாசன் உள்ளிட்டோர் பேசினர்."புதிய கண்டுபிடிப்பிற்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளதால், வெகு விரைவில், கார்னியா செல் வளர்ப்பு முறையில், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை துவங்கும்' என டாக்டர் மாதவன் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

Powered By Blogger
Powered by Blogger.

Followers