அரியலூர், ஜூலை2: தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுவதாகவும், முதல் கட்டமாக திருநெல்வேலியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 160 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதாகவும் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்புத் துறை இணை அமைச்சர் து. நெப்போலியன் தெரிவித்தார்.
அரியலூரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் தனியார் துறையில் மாற்றுத் திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு சிறப்பு முகாமை புதன்கிழமை தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது:
மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு விதிகளின்படி 3 சதம் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். தற்போது இது கண்காணிக்கப்பட்டு, அனைத்துத் துறைகளிலும் 3 சதம் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. இது தனியார் துறையிலும் விரிவுபடுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான், இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
முதல் கட்டமாக, திருநெல்வேலியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 160 மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரியலூரில் தற்போது நடைபெறும் முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும்.
ஆஸ்திரேலியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியாகும். ஆனால், இந்தியாவில் உள்ள மாற்றுத் திறனாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும்.
தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகளுக்கென தனியாக ஒரு துறையை ஏற்படுத்தி, அவர்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் என்றார் நெப்போலியன்.
தொடக்க விழா நிகழ்ச்சிக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் த. ஆபிரகாம் தலைமை வகித்தார்.
0 comments:
Post a Comment